ஆரோக்கியமான சமுதாயம் உருவாக அரசாங்கம் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்
இன்றைய இயந்திரமயமான மற்றும் டிஜிட்டல் உலகில், நாம் தொலைத்து வரும் மிக முக்கியமான விஷயம் விளையாட்டு. ஒரு காலத்தில் மாலை வேளைகளில் ஊர் மைதானங்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை நிரம்பி வழிந்தன. ஆனால் இன்று, வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன; வீடுகளுக்குள் கணினித் திரைகளுடனும், கைபேசிகளுடனும் இளைய தலைமுறை முடங்கிக் கிடக்கிறது. விளையாடுவது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் தீர்மானிக்கும் காரணியாகும்.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்
மாறிப்போன காலமும் பெற்றோரின் நிலையும்
முன்பெல்லாம் மாலை நேரத்தில் விளையாடச் செல்லும் பிள்ளைகளை, "படிப்பை விட்டுவிட்டு ஏன் விளையாடுகிறாய்?" என்று பெற்றோர்கள் அடித்து வீட்டிற்கு அழைத்து வருவார்கள். விளையாட்டில் அதிக நேரம் செலவிடுவது நேர விரயம் எனக் கருதப்பட்டது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கைபேசி (Facebook, YouTube) போன்றவற்றில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை, "தயவுசெய்து வெளியூர்ச் சென்று விளையாடுங்கள்" என்று பெற்றோர்கள் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த டிஜிட்டல் அடிமைத்தனம் நமது சமூகத்தின் ஆரோக்கியத்தை மெல்ல மெல்லச் சிதைத்து வருகிறது. இதனால் சிறுவயதிலேயே கண்பார்வை குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
ஏன் விளையாட வேண்டும்? நன்மைகளும் தீர்வுகளும்
விளையாட்டு என்பது உடலைச் சீராக வைக்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பல:
நோய் எதிர்ப்பு சக்தி: உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டுகள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கின்றன.
மருத்துவச் செலவு குறைதல்: உடற்பயிற்சி ஒரு மருந்தாகச் செயல்படுகிறது. நோய்கள் அண்டாத போது, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையான மருத்துவச் செலவுகள் தானாகவே குறைகின்றன.
மனநல ஆரோக்கியம்: எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், மாலையில் நண்பர்களுடன் விளையாடும்போது மூளையில் 'எண்டோர்பின்' சுரந்து மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. இது மன அழுத்தம் (Stress) மற்றும் உளவியல் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
போதை வஸ்துக்களுக்கு முற்றுப்புள்ளி
இன்று இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல் போதைப்பொருள் பாவனை. வேலையின்மை, தனிமை மற்றும் முறையான பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததே இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது, அவர்களின் ஆற்றல் சரியான திசையில் செலவிடப்படுகிறது. விளையாட்டு அவர்களை ஒழுக்கமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதோடு, போதை வஸ்துக்களின் பக்கம் செல்லவிடாமல் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ஒரு விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி, மற்ற தேவையற்ற போதைகளை மறக்கச் செய்யும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்:- சமூகத்தின் பிணைப்பு
நமது முன்னோர்கள் ஆணும் பெண்ணும் கூடி விளையாடிய விளையாட்டுகள் சமூக ஒற்றுமையை வளர்த்தன. அவை வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, வீரத்தின் அடையாளங்கள்.
ஆண்களுக்கானவை: சிலம்பம், இளவட்டக் கல் தூக்குதல், கபடி, ஜல்லிக்கட்டு போன்றவை வீரத்தையும் உடல் வலிமையையும் சோதிப்பவை.
பெண்களுக்கானவை: தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், பாண்டி போன்ற விளையாட்டுகள் பொறுமையையும் கணக்குத் திறனையும் வளர்ப்பவை.
பொதுவானவை: கிளித்தட்டு, சடுகுடு, நொண்டி, கண்ணாமூச்சி போன்றவை ஜாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக இருந்தன. இவற்றை மீண்டும் மீட்டெடுப்பது நமது கலாச்சாரக் கடமையாகும்.
அரசாங்கத்தின் கடமை:- பொழுதுபோக்கு அம்சங்கள்
மக்களை விளையாடத் தூண்டுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.
ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சிதைந்து போயுள்ள விளையாட்டு மைதானங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.
சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் நவீன நடைப்பயிற்சிப் பூங்காக்களை (Parks) அமைக்க வேண்டும்.
உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய பொது மைதானங்கள் உருவாக்குவது இளைஞர்களை நல்வழிப்படுத்தும். மைதானங்களில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் வேலை முடிந்து வருபவர்களும் விளையாட ஏதுவாக இருக்கும்.
நமது வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், நண்பர்களோடு இணைந்தோ அல்லது தனியாகவோ தினமும் மாலை நேரத்தில் குறைந்தது ஒரு மணிநேரம் விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆரோக்கியமான உடலும், தெளிவான மனமுமே ஒரு தேசத்தின் உண்மையான பலம். பாரம்பரிய விளையாட்டுகளைக் கொண்டாடுவோம்; கைபேசித் திரையை விட்டு வெளியே வருவோம்; போதைப் பழக்கத்தை ஒழிப்போம்; நோயற்ற வாழ்வை வாழ்ந்து நமது எதிர்காலத் தலைமுறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்வோம்
நன்றி,ஜெகன் ஊடகவியலாளர் tamilviyugam12@gmail.com

COMMENTS